தங்களை எதிர்த்தால் மட்டுமின்றி, தேவைப்படும் போதில் பாரம்பரியம் மிக்க கட்சிகளை உடைப்பதும் சரி, பிரித்தாளுவதும் சரி பாரதிய ஜனதா கட்சிக்கு கைவந்த கலை.
இதற்கு மிகச் சிறந்த, எளிய உதாரணம் மகாராஷ்டிராவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. முதலாவதாக, பால் தாக்கரே நிறுவிய சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்த பாஜக, அப்போதைய தலைவரும் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே பாஜவின் தலைமையுடன் ஒத்து போக மறுத்ததும், தனது விளையாட்டை துவங்கியது.
சிவசேனாவில் பால் தாக்கரேவுக்கு அடுத்த முக்கிய இடத்தில் இருந்த ஏக்நாத் ஷிண்டே உடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி, அவரது ஆதரவாளர்களுடன் அவரை வெளியேற வைத்ததுடன் மட்டுமல்லாமல், சிவசேனா கட்சியின் பெயர் அவரது தலைமைக்கே என்று நீதிமன்றத்தை சொல்ல வைத்தது.
இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா உடன் கூட்டணி அமைத்து அவரை முதல்வராக்கி, பாஜவை சேர்ந்த தேவந்திர பட்னவிஸ்ஸை துணை முதல்வாரக்கி அழகு பார்த்தது பாஜ.
இரண்டாவதாக, அதே மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய மற்றும் மூத்த தலைவரான சரத்பவார் அக்கட்சியில் இருந்து பிரிந்து தோற்றுவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது.
சரத்பவாருடன் நீண்ட நாட்களாக பாஜ நடத்திய பேச்சுவார்த்தைக்கு அவர் பிடி கொடுக்காமல் போகவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த அவரது அண்ணன் மகனும் மூத்த தலைவருமான அஜித் பவாருடன் ரகசிய பேரம் பேசி, ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்தது பிரித்தது போல், அஜித் பவாரை அவரது ஆதரவாளர்களுடன் தேசியவாத காங்கிரசில் இருந்து வெளியேற செய்து, தற்போதைய கூட்டணி ஆட்சியில் துணை முதல்வர் பதவி கொடுத்து சரத்பவாரை பழிவாங்கி கொண்டது பாஜ.
இது மட்டுமின்றி, தேசியவாத காங்கிரஸ் அதிக ஆதரவாளர்களைக் கொண்ட அஜித் பவாருக்கே என்ற சாதகமான தீர்ப்பை பெற்று தந்தது. இதனால் அதனை நிறுவிய சரத்பவாரின் ’பவர்’ பறிக்கப்பட்டு தேசியவாத காங்கிரஸ் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத்சந்திர பவார் ஆகி உள்ளது.
மூன்றாவதாக, ராஜஸ்தானில் அப்போதைய முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த துணை முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சச்சின் பைலட்டை அவரது ஆதரவாளர்களுடன் வெளியேற செய்து ஆட்சியை கவிழ்த்தது பாஜ.
இது போல, வட மாநிலங்களில் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜ அரங்கேற்றிய பிரித்தாளும் சூழ்ச்சி நாடகங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், அது தமிழ்நாட்டில் எடுபடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆனாலும், தொடரும் விக்கிரமாதித்தன் கதை போல, தமிழக பாஜ தலைவர்கள் மற்றும் இங்குள்ள தனது ஆதரவு ஊடகங்கள் மூலம் அந்த பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜ தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியே, பிரபல தமிழ் நாளிதழில் இன்று வெளியாகி உள்ள சர்வே முடிவுகள். இதன் மூலம், வலுவான திமுக கூட்டணியில் இருந்து மறைமுகமாக காங்கிரஸை கழற்றி விட வைத்து தவெக உடன் இணைய வைப்பதே அதன் குறிக்கோளாக உள்ளது.
இதற்காகவே, தவெக, அதன் தலைவர் விஜய் தொடர்பான புள்ளி விவரங்கள் 20% மேல் இருப்பது போல், பலமுள்ளதாக, வலுவானதாக காட்டப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பாஜவின் முன்னாள் மாநிலத் தலைவர்களில் ஒருவரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தவெகவை என்டிஏ கூட்டணி பக்கம் இழுக்க சென்சார் சர்டிபிகேட், சிபிஐ விசாரணையை அடுத்து வெளிநாட்டு நிதி மூலம் அமலாக்கத்துறை நடவடிக்கை என பாஜ ஒருபுறம் அடுத்தடுத்து காய்களை நகர்த்தினாலும், மற்றொரு புறம், தனித்து போட்டியிட செய்து திமுகவின் வாக்கு வங்கியை பிரிக்கும் நகர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு அச்சாரமிடுவது போலவே, தவெக பக்கம் வந்தால் காங்கிரஸுக்கு 75 சீட் வரை ஒதுக்கக் கூடும். அதற்கு தவெக தரப்பு தயாராக இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளாகும்.
முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெ.வின் மறைவுக்கு பின்னர் அதிமுகவை துண்டு துண்டாக பிரித்ததும் பாஜவின் கைங்கர்யமே. அன்றைய சூழலில், 2ம் கட்ட தலைவியாக இருந்த சசிகலாவை வழக்கின் மூலம் சிறைக்கு அனுப்பி அதிமுகவில் இருந்து பிரித்தது.
அடுத்த கட்டமாக, ஓபிஎஸ்ஸை தர்மயுத்தத்தின் மூலமும் டிடிவி தினகரனையும் அதிமுகவில் இருந்து ஓரங்கட்ட வைத்த பின், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு நடந்தது போல், அதிமுகவையும் பிரித்து, அன்று முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸுக்கே இரட்டை இலை சின்னமும் அதிமுக பொதுச்செயலாளர் பதவியும் கிடைக்க செய்தது.
தற்போது வலுவாக கூட்டணி அமைத்திருக்கும் திமுக தலைமையிலான கூட்டணியை பிரித்தாளும் சூழ்ச்சியாகவே மேற்கூறியவை நடந்திருப்பதாக சந்தேகம் வலுக்கிறது. ஆனால், பாஜவின் இந்த பிரித்தாளும் சூழ்ச்சி தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதுவும் திமுகவிடம் எடுபடுமா என்பது கேள்விக்குறியே.