சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் 1.55 மணிக்கு காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான நல்லகண்ணு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒன்றாம் தேதி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், நேற்று உயிர் பிரிந்தது.
நேற்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால், அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணி வரை அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தவெக தலைவர் விஜய், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், ரஜினி, கமல், பார்த்திபன், வைரமுத்து உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு மரியாதையோடு இறுதி ஊர்வலம் செய்யப்படவுள்ளது. 24 குண்டுகள் 3 முறை என மொத்தம் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நல்லகண்ணுவின் விருப்பப்படி மாணவர்களின் படிப்புக்காக சென்னை மருத்துவ கல்லூரிக்கு அவரின் உடல் தானமாக அளிக்கப்பட உள்ளது. பிறகு, கட்சியினர் அணிவகுப்போடு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட உள்ளது.


