தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. மேலும், இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
செல்வப்பெருந்தகை மாற்றம் தேர்தல் முடிந்தவுடனேயே நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. செல்வபெருந்தகையும் தன்னை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறியிருந்தர்.
இந்த நிலையில், மாணிக்கம் தாகூரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமித்து அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறப்பித்துள்ளதாக காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங். பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். மேலும், இதுநாள்வரை கட்சிக்கு செல்வப்பெருந்தகை அளித்த பங்களிப்புக்கு கே.சி.வேணுகோபால் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி எம்.பி.யான மாணிக்கம் தாகூர், மக்களவை கொறடாவாகவும் இருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். மாணிக்கம் தாகூர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் அணுக்கமாகச் செல்லக் கூடியவர் என்றும் கூறப்படுகிறது.
மாணிக்கம் தாகூர் கடந்த 2009, 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.
முன்னதாக, இன்று மதியம் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவராக சஞ்சய் தத், உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ராஜேந்திர பால் மற்றும் ஒடிசா காங்கிரஸ் தலைவராக லால்ஜி தேசாய் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
விருதுநகர் எம்.பி.யான மாணிக்கம் தாகூர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வெகு நாட்களுக்கு முன்னதாக ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டை முன்னெடுத்து காங்கிரஸ் – திமுக கூட்டணி விரிசலுக்கு வழிவகுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


