தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் 1953 ஜனவரி 7ம் தேதி பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் ‘அந்த 7 நாட்கள்’, ‘முந்தானை முடிச்சு’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இவர் தனது நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்திருந்தார்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். இவரது தனித்துவமான கதை சொல்லும் முறையும், சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையும் அவருக்கு திரைக்கதை மன்னன் என்ற பெயரை பெற்று தந்தது.
இவரது கதைகள் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும். இன்றுவரை பல இளம் இயக்குநர்களுக்குத் திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு பாக்யராஜின் படங்களே பாடப்புத்தகமாக விளங்குகின்றன.
இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1989ம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.
இக்கட்சி 1989 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. பின்னர் 1991 கேரளா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது.
தேர்தல் களத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், பாக்யராஜ் தனது கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இருப்பினும், இந்த அரசியல் பயணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு அவரது கட்சி செயல்படாமல் போனது. பின்னர் அவர் திரையுலகில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
அவ்வப்போது சில படங்களிலும் நடித்து வந்தார். அண்மையில் பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் முடிந்த விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் தான் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.


