தமிழ்நாட்டில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் மே 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி சூடு பிடித்திருந்த தமிழ்நாடு அரசியல் களத்தில் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வாபஸ் பெறுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து, அரசியல் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெறுவதாகத் தெரிவித்திருந்தார்.
அதே போல், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 5,938 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவம், நுண் பார்வையாளர்கள், கண்காணிப்பு கேமரா கொண்டு கண்காணிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின்னர், அமலுக்கு வர உள்ள தேர்தல் விதிமுறைகள் குறித்த பட்டியலை அவர் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார். 234 தொகுதிகளைச் சேர்த்து, 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி மையங்கள் இருப்பதாகவும், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.
பாதுகாப்புப் பணியில் 83 ஆயிரத்து 875 காவலர்கள் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும், 300 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 4 லட்சத்து 18 ஆயிரத்து 541 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் 1,262 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்கள், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இது தவிர செல்போன்களை வாக்குச்சாவடி மையத்திற்கு எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்றும், வெளியில் வைத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.


