நடிகரும் சத்யராஜின் மகனுமான சிபி சத்யராஜ், நடிகர் விஜய்க்கு ஆதரவாக பல பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அவரது தந்தை சத்யராஜ் மற்றும் சகோதரி திவ்யா திமுகவுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில், சிபிராஜ் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக செயல்படுவது குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிபிராஜ் விஜய் மீது அவருக்குள்ள அன்பை பற்றிய கடிதத்தை தேர்தல் நாளுக்கு முன்னதாக வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், அன்புள்ள விஜய் அண்ணா, 1993ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, பொள்ளாச்சி சக்தி ஹோட்டல் மொட்டை மாடியில் நடைபெற்ற அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எஸ்.ஏ.சி. சார் மற்றும் கேப்டன் விஜயகாந்த் மாமாவுடன் வந்திருந்த போதுதான் உங்களை முதன்முதலில் சந்தித்ததாகவும் இந்த அடக்கமான இளைஞன், தன்னையும் சேர்த்து லட்சக்கணக்கான இதயங்களைக் கவர்ந்து, எதிர்காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பான் என்று அப்போது சிறிதும் அறிந்திருக்கவில்லை என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு ரசிகனாக, நடிகனாக, சகோதரனாக மற்றும் நண்பனாக, நீங்கள் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் முடிவை மதிப்பது முக்கியம் என்று உணர்வதாகவும் எப்போதும் உங்களுக்குத் துணையாக நிற்பேன் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது வாழ்வில் விஜய் முக்கியப் பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சிபிராஜ், அப்போது காதலியாக இருந்து பின்னர் மனைவியான ரேவதியுடன் சென்ற முதல் சந்திப்பு, 20-11-2000 அன்று ஆல்பர்ட் தியேட்டரில் ‘பிரியமானவளே’ திரைப்படத்தைப் பார்த்த போது நிகழ்ந்ததாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய வெற்றிகளைப் போலவே விஜயின் வெற்றிகளை ரசித்ததாகவும் பல ஆண்டுகளாக உங்களுடன் செலவிட்ட தனிப்பட்ட தருணங்கள், குறிப்பாக உங்கள் வீட்டிற்கு இரவு உணவுக்கு வந்த போதும், என்னுடைய ‘லீ’ திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோதும், தன்னுடைய சில படங்கள் வெற்றிபெற வாழ்த்தி அழைத்த போதும், உங்களை அழைக்கும் போதோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பும் போதோ கிடைத்த உடனடிப் பதில்களும் தன் வாழ்வின் மிகவும் பொக்கிஷமான நினைவுகள் என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
சினிமாப் பின்னணியிலிருந்து வந்தாலும், சினிமா உலகிற்குள் நுழைய நீங்கள் எனக்கு ஒரு பெரும் உத்வேகமாக இருந்தீர்கள். உங்கள் திரைப்படங்கள் பெரும்பாலும் வெறும் பொழுதுபோக்காகக் கருதப்பட்டாலும், அவை எனக்கு உண்மையான அன்பு, நட்பு, தன்னம்பிக்கை, சுயமரியாதை, முடிவெடுக்கும் திறன் மற்றும் பலவற்றின் மதிப்பைக் கற்றுக் கொடுத்ததாகவும் பெரும்பாலான சுயமுன்னேற்ற இலக்கியங்களால் வழங்க முடியாத ஆழமான வாழ்க்கைப் பார்வைகளை விஜயின் குட்டிக் கதைகள் அளித்ததாகவும் நெகிழ்ந்துள்ளார்.
‘ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்’ என்பது வெறும் திரைப்பட வசனம் மட்டுமல்ல, இதுவே நீங்கள் பின்பற்றும் தத்துவம் என்பதையும், அவ்வாறே எங்களையும் பின்பற்றத் தூண்டுகிறது என்பதையும் பல ஆண்டுகளாக உணர்ந்துள்ளதாக சிபிராஜ் அக்கடிதத்தில் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இறுதியாக, அன்புள்ள அண்ணா, கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எங்களுக்கு உத்வேகம் அளித்து, எங்களை மகிழ்வித்து மகிழ்ச்சியாக வைத்திருந்ததற்கு நன்றி. நீங்கள் எங்களுக்கு வழங்கிய அற்புதமான திரையுலகத் தருணங்களை என்றும் போற்றிப் பாதுகாப்போம். வென்று வா தலைவா! நாங்க இருக்கோம் என்று வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து கடிதத்தை முடித்துள்ளார்.


