தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைவதால், இம்மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவித்தது.
அதன்படி புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளுக்கும் நாளை (ஏப்.23) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 294 தொகுதிகள் கொண்ட மே.வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், முதல் கட்டமாக நாளை (ஏப்.23) 152 தொகுதிகளுக்கும், தொடர்ந்து ஏப்.29ம் தேதி 2வது கட்டமாக மீதமுள்ள 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வழக்கமாக தேர்தல் முடிவடைந்த அடுத்த சில மணி நேரங்களில் இருந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகும். ஆனால், இந்த முறை இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 9ம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது என அறிவித்துள்ளது.
இதனை மீறி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டால், 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126ஏ பிரிவின் கீழ் தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தடை செய்யப்பட்ட காலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது அல்லது ஒளிபரப்புவது, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதனால், தமிழ்நாட்டிற்ல் நாளை வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு இறுதியாக மே.வங்கத்தில் ஏப்.29 வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


