தமிழ்நாட்டில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் மே 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இதனையொட்டி சூடு பிடித்திருந்த தமிழ்நாடு அரசியல் களத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார். 234 தொகுதிகளைச் சேர்த்து, 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி மையங்கள் இருப்பதாகவும், அவற்றில் 5,938 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.
பாதுகாப்புப் பணியில் 83 ஆயிரத்து 875 காவலர்கள் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும், 300 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 4 லட்சத்து 18 ஆயிரத்து 541 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் 1,262 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்கள், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் நாளை தேர்தல் நடைபெறுவதையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்கும் வகையில் உயர் சிறப்பு கண்காணிப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 75,000 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 128 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்தும் ஒரே இடத்தில் கண்காணிக்க தனிப்பட்ட அறை அமைக்கப்பட்டுள்ளது.


