தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைய உள்ளதால், தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து சூடு பிடித்த தமிழக அரசியல் களத்தில், தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவர்.
தேர்தலையொட்டி, தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்தும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்டவைகள் துப்பாக்கி பாதுகாப்புடன் நேற்று மதியம் முதல் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வாக்களிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 85 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான 5,938 வாக்குச்சாவடிகளில் 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் அலுவலர்கள் நேற்று மாலை முதல் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று மின்னணு வாக்கு இயந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டு, தயார் நிலையில் வைத்தனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடலூர் மாவட்டத்தில் 14.84%, நாகை மாவட்டத்தில் 17.51%, விருத்தாசலம் மாவட்டத்தில் 14.54%, திட்டக்குடி 15.57%, நெய்வேலி 15.25%, பண்ருட்டி 15%, குறிஞ்சிப்பாடி 15.72%, புவனகிரி, 15.01%, சிதம்பரம் 14.27%, காட்டுமன்னார் கோவில் 13%, மதுரை 17.08%, கிருஷ்ணகிரியில் 16.41%, தூத்துக்குடி 17.04%, நீலகிரி 15.54%, தேனி 17.97%, திருவள்ளூர் 17.17%, திருவாரூர் 17.46%, மயிலாடுதுறை 17.02%, நாகை 18.78%, நாமக்கல் 17.19%, கரூர் 18.78%, பெரம்பலூர் 18.78%, புதுக்கோட்டை 16.79% வாக்குகள் சராசரியாக பதிவாகி உள்ளது.


