தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைய உள்ளதால், தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து சூடு பிடித்த தமிழக அரசியல் களத்தில், தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவர்.
தேர்தலையொட்டி, தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்தும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்டவைகள் துப்பாக்கி பாதுகாப்புடன் நேற்று மதியம் முதல் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 85 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான 5,938 வாக்குச்சாவடிகளில் 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
இதனிடையே, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 17.69% வாக்குகள் பதிவான நிலையில், அதன் பின்னர் 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குகள் பதிவானது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.29% பதிவான நிலையில், 2026 தேர்தலில் காலை 11 மணிக்கு 11.27% கூடுதலாக 37.56% வாக்குகள் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதன்படி, சென்னையில் 54.58%, கோவை 58.24%, மதுரை 54.75%, திருச்சி 57.66%, தூத்துக்குடி 52.55%, நெல்லை 50.73%, அரியலூர் 55.18%, செங்கல்பட்டு 56.28% கடலூர் 55.13%, தருமபுரி 59.02%, திருவள்ளூர் 55.45%, திருவாரூர் 56%, திண்டுக்கல் 59.79%, ஈரோடு 61.79%, கள்ளக்குறிச்சி 57.15%, காஞ்சிபுரம் 58.98%, கன்னியாகுமரி 50.35%, கரூர் 60.77%, கிருஷ்ணகிரி 56.21%, மயிலாடுதுறை 53.59%, நாகை 57.07%, நாமக்கல் 62.51%, பெரம்பலூர் 57.55%, புதுக்கோட்டை 56.78%, ராமநாதபுரம் 51.54%, ராணிப்பேட்டை 58.62% சேலம் 61.42%, சிவகங்கை 53.50% வாக்குகள் உள்பட தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 3 கோடியே 25 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், இந்த தேர்தலில் 17.2% வாக்குகள் கூடுதலாக பதிவாகி மதியம் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் 80% முதல் 85% வரையிலான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


