தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைய உள்ளதால், தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து சூடு பிடித்த தமிழக அரசியல் களத்தில், தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலையொட்டி, தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்தும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்டவைகள் துப்பாக்கி பாதுகாப்புடன் நேற்று மதியம் முதல் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 85 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான 5,938 வாக்குச்சாவடிகளில் 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, சுமார் 1.47 லட்சம் காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
இதனிடையே, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 17.69%, 11 மணி நிலவரப்படி 37.56%, மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 56.81%, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவானது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் காலை 9 மணி நிலவரம் முதல் மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவில், இந்த தேர்தலில் கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 தேர்தலில் மாலை 5 மணிக்கு 63.60% பதிவாகி இருந்த நிலையில், இந்த தேர்தலில் 18.64% கூடுதலாக 82.24% வாக்குகள் பதிவாகி உள்ளன. 5.73 கோடி வாக்காளர்களில் மாலை 5 மணிக்குள் 4.71 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
இதன்படி, சென்னையில் 81.34%, கோவை 82.33%, மதுரை 77.89%, திருச்சி 82.76%, தூத்துக்குடி 77.56%, அரியலூர் 83.09%, செங்கல்பட்டு 82.41% கடலூர் 81.91%, நாகை 83.15%, தருமபுரி 87.28%, திருவள்ளூர் 80.70%, திருவாரூர் 80.65%, திண்டுக்கல் 86.35%, ஈரோடு 87.59%, கள்ளக்குறிச்சி 84.22%, காஞ்சிபுரம் 84.92%, கன்னியாகுமரி 73.44%, கரூர் 89.32%, கிருஷ்ணகிரி 82.40%, மயிலாடுதுறை 78.41%, நாகை 83.15%, நாமக்கல் 87.63%, பெரம்பலூர் 82.75%, புதுக்கோட்டை 81.55%, ராமநாதபுரம் 74.41%, ராணிப்பேட்டை 86.25% சேலம் 88.02%, சிவகங்கை 74.44%, நீலகிரி 75.90%, தேனி 78.73%, தஞ்சை 78.07%, தென்காசி 79.28%, திருப்பத்தூர் 85.28%, திருப்பூர் 86.33%, திருவண்ணாமலை 85.59%, வேலூர் 85.06% வாக்குகள், விழுப்புரம் 85.45%, சேலம் 88.02% உள்பட தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி சராசரியாக 82.24% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதனால் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் 80% முதல் 85% வரையிலான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


