தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதி முடிவடைய உள்ளதால், தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து சூடு பிடித்த தமிழக அரசியல் களத்தில், தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலையொட்டி, தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தலில் பயன்படுத்தும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்டவைகள் துப்பாக்கி பாதுகாப்புடன் நேற்று மதியம் முதல் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 85 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான 5,938 வாக்குச்சாவடிகளில் 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, சுமார் 1.47 லட்சம் காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இதனிடையே, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 17.69%, 11 மணி நிலவரப்படி 37.56%, மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 56.81%, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவானது நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வெளியே இருப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் அதற்கு முன்பு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு அமைதியாக முடிந்த பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (இவிஎம்) சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட உள்ளன.


