தமிழக வரலாற்றில் இன்றைய தேர்தலில் முதல்முறையாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், முதல்வ மு.க. ஸ்டாலின் “மே 4 தமிழ்நாடு வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்துள்ளது. இரவு எட்டு மணி நிலவரப்படி இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நடந்த தேர்தல்களில் இந்தளவு சதவீத வாக்குகள் பதிவாகவில்லை எனவும், இதுவே முதல்முறை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மே.வங்கத்தில் இன்று நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவில் இரவு 8 மணி வரை 91.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவும் வரலாற்றில் முதல் முறை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “ஜனநாயகத் திருவிழா; சாதனை வாக்குப்பதிவு. பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு. எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல். 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறியுள்ளார்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர். “ஒரு வாக்குதானே” என எண்ணாமல், “ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது” என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


