நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது.
இதில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 28 தொகுதிகள், மாநிலங்களவை எம்பி பதவி ஒன்றும் வழங்கியது.
ஆனால் போட்டியிட்ட 28 தொகுதிகளில் மயிலாடுதுறை, மேலூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் அறுதி பெரும்பான்மை கிடைக்காத போதும், நடிகர் விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே, தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டப்பேரவை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தவெக தரப்பில் இருந்து திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
இந்த கூட்டத்தின் போது, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவராக கிள்ளியூர் தொகுதியில் இருந்து 3வது முறையாக வெற்றி பெற்ற ராஜேஷ்குமார் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக, திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசியவர்களில் கிள்ளியூர் ராஜேஷ்குமாரும் ஒருவராவார்.
அப்போது, இவரைத் தவிர காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், எம்பி ஜோதிமணி, ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


