தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய திராவிட கட்சிகளை தனது 2 வருட அரசியல் வருகையால் திணறடித்து நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று சாதனை படைத்து வாகை சூடியுள்ளது.
விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியலில் இரு திராவிட கட்சிகளுக்கும் கடும் போட்டியாக அமைந்தது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இருப்பினும், தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டப்பேரவை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தவெக தரப்பில் இருந்து திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவளித்துள்ளது. இதன் மூலம் கடந்த 11 ஆண்டு கால திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.
இதனிடையே, தவெக தலைவர் விஜய் நாளை (மே 7) சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், ஆளுநரை சந்தித்த பின்னர் இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் திருவனந்தபுரத்திலிருந்து இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை திரும்பினார்.
இதையடுத்து, அவரை தவெக தலைவர் விஜய் பிற்பகல் 3.30 மணிக்கு சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். இதற்காக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் பனையூரில் இருந்து புறப்பட்டார். ஆளுநர் அழைக்கும் பட்சத்தில் விஜய் நாளை பதவியேற்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆளுநரை நேரில் சந்தித்து, தனது பெரும்பான்மையை நிரூபிக்க உரிமை கோரவும், பதவியேற்பு விழா குறித்த விவரங்களை ஆலோசிக்கவும் விஜய் பனையூர் அலுவலகத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டார்.


