தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்பாராத அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் 59 தொகுதிகளிலும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, தேமுதிக 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் திமுக வலுவான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
இதனிடையே, திமுகவின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்பது குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சி தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட போகிறார்கள் என்ற பரபரப்பு தற்போது திமுகவினரிடையே நிலவியுள்ளது.
சட்டசபையில் திமுகவின் குரலாக ஒலிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.


