ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆர்சிபி அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீசியது. லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், அர்ஷின் குல்கர்னி களமிறங்கினர். 2வது ஓவரின்போது மழை குறுக்கிட்டு, சிறிது நேரம் கழித்து போட்டி மீண்டும் துவங்கியது. இதையடுத்து மார்ஷ், அர்ஷின் இணை பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். க்ருணால் பாண்டியா வீசிய 10வது ஓவரில் அர்ஷின் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன் பின், மார்ஷ் உடன் பூரன் இணை சேர்ந்தார். இடையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி தடைபட்டு, மழை நின்ற பிறகு தொடங்கியது. மிட்செல் மார்ஷ் ஆர்சிபி பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் வேட்டையாடினார். 49 பந்துகளில் அவர் சதம் விளாசினார்.
அந்த நிலையில், 14வது ஓவர் முடிவில் 3வது முறையாக மீண்டும் மழை குறுக்கிட்டு போட்டி தாமதம் ஆனது. இறுதியில் மழையினால் டிஎல்எஸ் முறைப்படி ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 19 ஓவர்களில் லக்னோ 209 ரன்கள் எடுத்தது.
அப்போது, மிட்செட் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 9 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 111 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 10 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பூரன் 23 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 38 ரன் எடுத்திருந்தார்.
இதையடுத்து, 210 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் முதல் ஓவரிலேயே பெத்தேல் 4 ரன்கள், விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் விளையாடிய தேவ்தத் படிக்கல் 34, ரஜத் படிதார் 61 ரன்கள் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் 17 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து அவுட்டாகினார்.
கடைசியில் 19 ஒவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதன் மூலம், 6 தொடர் தோல்விகளுக்கு பிறகு லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிஷெல் மார்ஷ் ஆட்ட நாயகனாக தேர்வானார்.


