தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் என்னும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் உள்ளது.
இதனால், தவெக ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை மீறி, விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
அதே நேரத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 6 இடங்களுக்காக தவெக தலைவர் விஜயும் கட்சி தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெகவின் 2ம் கட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, திமுக – அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு கட்சிகளுக்கும் இல்லாத நிலையில், இரு திராவிடப் பெரும் கட்சிகளிடமிருந்து வரும் அடுத்தகட்ட நகர்வுகள், தவெகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், இருபெரும் திராவிட கட்சிகளும் ஒன்றுசேரும் பட்சத்தில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும் பதவியேற்பார்கள் எனவும், இருதரப்பிலும் அமைச்சர்கள் பதவி வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதே நேரத்தில், இதுதொடர்பாக இரு கட்சிகளும் எதையும் உறுதிப்படுத்தவில்லை. மேலும், ’சிறந்த எதிர்க்கட்சியாக இருப்போம் எனவும், தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக எந்த இடையூறும் செய்யாது’ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ’தமிழக அரசியல் களம் அதிமுகவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு நாளில் நல்ல முடிவு வரும்’ என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முன்வந்தால், தமிழக வெற்றி கழகத்தின் 107 சட்டப்பேரவை உறுப்பினர்களும் மொத்தமாக ராஜினாமா செய்வதைப் பரிசீலிக்கக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
அதிமுகவுடன் திமுக மறைமுகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தவெக தலைவர் விஜய் இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
அதேநேரத்தில், தேர்தலுக்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகள் முடிவடையாமல் இருப்பதாலும், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாலும் தவெக இந்த முடிவை பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


