தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் என்னும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் உள்ளது.
இதனால், தவெக ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை மீறி, பதவி சுகத்துக்காக தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
அதே நேரத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 6 இடங்களுக்காக தவெக தலைவர் விஜயும் கட்சி தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெகவின் 2ம் கட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத அளவு உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் சூழலில், திமுக – அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இரு கட்சிகளுக்கும் இல்லாத நிலையில், இரு திராவிடப் பெரும் கட்சிகளிடமிருந்து வரும் அடுத்தகட்ட நகர்வுகள், தவெகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமைவது சாத்தியமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், திமுக, அதிமுக கூட்டணி அமைவது சாத்தியம் என்று கருதவில்லை. ஏனெனில், தமிழக அரசியலில் திமுக-வும், அதிமுகவும் பரம எதிரிகளாகத் திகழ்கிறோம். ஒருசில பேர் இடையில் வருவார்கள், போவார்கள். தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், எதிர்க்கட்சியாக திமுக எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைய ஆலோசனையின் போது எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார்.
பெரும்பான்மையை நிரூபிக்க தேவைப்படும் எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாமல் தவெக திணறி வரும் நிலையில், திமுக – அதிமுக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


