நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அறுதி பெரும்பான்மையின்றி ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது.
தவெக தலைவர் விஜய் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை 2 முறை சந்தித்த போதிலும், ஆட்சியமைக்க அவர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தாம் தயாராக இருப்பதாகவும், அதே வேளை, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி, பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான பலம் தங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஆளுநர் மாளிகையில் எம்எல்ஏக்களை நேரில் காண்பித்து பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லவில்லை என்றும், அந்த பலப்பரீட்சை சட்டப்பேரவையிலேயே நடக்கும் எனவும் விவரித்தார்.
பெரும்பான்மை இல்லாத அரசு பதவி ஏற்ற பிறகு, ஆதரவு திரட்ட குதிரை பேரத்தில் ஈடுபடுவதை தாம் எப்படி அனுமதிக்க முடியும் எனவும் இது ஜனநாயகத்திற்கு மிகவும் கேடானது என்றும் விவரித்துள்ள ஆளுநர், தமிழ்நாட்டு மக்கள் மீது தனக்கு அக்கறை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவை பொறுத்தே விசிகவின் நிலைப்பாடு இருக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அதில் எடுக்கும் முடிவை நாளை காலை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
எனவே, இன்று மாலைக்குள் தவெகவிற்கு தேவையான 6 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவந்துவிடும்.
இந்நிலையில், பனையூரில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? பெரும்பான்மையை நிரூபிக்க என்ன வழிகள்? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு கிடைத்தும் ஆளுநர் அழைப்பு விடுக்காமல் இருந்தால் சட்ட ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதும் குறித்தும் சட்ட வல்லுநர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.


