தமிழ்நாட்டில் கடந்த ஏப்.23ம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான அறுதி தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரியிருந்தது.
இவற்றில் காங்கிரஸ் கட்சி மட்டும் கூட்டணி தர்மத்தை மீறி, பதவி அதிகார சுகத்துக்காக திமுகவுடனான 11 ஆண்டு கால உறவை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவளித்துள்ளது.
அதே நேரம், விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் வீரபாண்டியன், சண்முகம் ஆகியோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேற்று சந்தித்தனர்.
அப்போது தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறாக இருக்காது. மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். வலுவான சிறந்த எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என திமுக தலைவர் கூறியதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதன் அடிப்படையிலேயே விசிகவின் முடிவும் இருக்கும். இன்று மாலை நடைபெறும் விசிக ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டு, அந்த முடிவு நாளை காலை அறிவிக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில், தவெக ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து இடதுசாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக 3 மணி நேரத்திற்கு மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசித்து வருகிறது.
அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் 2 மணி நேரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


