தமிழகத்தில் கடந்த ஏப்.23ம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான அறுதி தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரியிருந்தது.
இவற்றில் காங்கிரஸ் கட்சி மட்டும் கூட்டணி தர்மத்தை மீறி, பதவி அதிகார சுகத்துக்காக திமுகவுடனான 11 ஆண்டு கால உறவை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவளித்துள்ளது.
அதே வேளை, சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தன. இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை பொறுத்தே விசிகவின் முடிவு இருக்குமென்றும் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, சிபிஎம், சிபிஐ கட்சிகள் தனித்தனியே நடத்திய ஆலோசனையில் தவெகவுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளன. சிபிஎம் சென்னை அலுவலகத்தில் தவெக மூத்த நிர்வாகி நிர்மல் குமாரிடம் ஆதரவு கடிதம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசியல் சட்டப்படி புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கையை ஆளுநர் உடனே எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாநிலத்தின் நலனை முன்னெடுத்து செல்வதற்கு புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


