மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்தையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
டெல்லி யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடமான ‘வீர் பூமி’யில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட பல தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு, மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு, இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக, அங்கு கூடியிருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவரது எக்ஸ் தளப் பதிவில், நவீன இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் ராஜீவ் காந்தி என்று புகழ்ந்துள்ளார்.


