தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் திணறியது.
அப்போது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.
அதைத் தொடர்ந்து சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கடரமணன், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள பல துறைகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. அதன்படி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நபராக விஜய்யின் நண்பர் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநாத் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆண்டவன் மீது ஆணையிட்டு என்று உறுதிமொழி எடுத்து ஸ்ரீநாத் பதவியேற்றார்.
அதன்பின், அவிநாசி எஸ்.கமலி, குமாரபாளையம் சி.விஜயலட்சுமி, காஞ்சிபுரம் ஆர்.வி.ரஞ்சித்குமார், கும்பகோணம் வினோத், திருவாடானை ராஜீவ், கடலூர் பி.ராஜ்குமார், அரக்கோணம் வி.காந்திராஜ், ஒட்டபிடாரம் பி.மதன் ராஜா, ராஜபாளையம் கே.ஜெகதீஸ்வரி, ஈரோடு கிழக்கு எம்.விஜய் பாலாஜி, ராசிபுரம் டி.லோகேஷ் தமிழ்செல்வன், சேலம் தெற்கு விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் ரமேஷ், வேளச்சேரி ஆர்.குமார், ஸ்ரீபெரும்புதூர் கே.தென்னரசு, கோவை வடக்கு வி.சம்பத் குமார், அறந்தாங்கி ஜே.முகமது ஃபர்வாஸ், ஆர்.கே.நகர் என்.மரிய வில்சன், கிணத்துக்கடவு கே.விக்னேஷ், தாம்பரம் சரத்குமார் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
மேலும், அமைச்சரவை விரிவாக்கத்திற்காக, ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு தவெக அரசு அழைப்பும் விடுத்தது. அந்த வகையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் பி.விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
தவெக அமைச்சரவையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். அதே போல், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தங்களது தரப்பில் யாரை அமைச்சராக்குவது என முடிவெடுத்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளன. விசிக சார்பில் எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


