தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
அதைத் தொடர்ந்து சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 10ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநாத், அவிநாசி எஸ்.கமலி, குமாரபாளையம் சி.விஜயலட்சுமி, காஞ்சிபுரம் ஆர்.வி.ரஞ்சித்குமார், காங்கிரஸ் எம்எல்ஏக்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார், பி.விஸ்வநாதன் உள்ளிட்ட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து 2வதாக தேசிய கீதமும், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் பாடப்பட்டது.
விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவின் போதும், முதலாவதாக வந்தே மாதரம் பாடல், இரண்டாவதாக தேசிய கீதம், கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்தது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவர் திருமா, கம்யூ.கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மூத்த நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழாமல் பார்த்து கொள்ளும்படியும் முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் இன்று அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும், முன்பு போல், முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டதும் சர்ச்சையாகி உள்ளது.


