கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பாளருமான கே.வெங்கட நாராயணாவை, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் டெல்லி முகமாக இருக்கக் கூடிய இந்த பதவிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை நியமித்தது, தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான கே.வெங்கட நாராயணா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவர், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.வி.என் பிராப்பர்டீஸ் நிறுவனராவார். திரைப்படத்துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் விக்கிபீடியாவை 2020ல் நிறுவினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளார். முக்கியமாக, தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, கடைசி படம் என்று கூறி நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்பட தயாரிப்பாளரும் இவரே.
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்திக்க விஜய் சென்றபோதெல்லாம் கே.வெங்கட நாராயணாவும் உடன் சென்றார்.
அப்போதே, தமிழக அரசியல்வாதிகள், பொதுமக்கள், ‘எதற்காக சம்பந்தம் இல்லாமல் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜனநாயகன் பட தயாரிப்பாளரை விஜய் ஏன் அழைத்து செல்கிறார்?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்ட அரசாணையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்படுகிறார். இந்த பதவிக்கு நியமிக்கப்படுபவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்கு அல்லது அதன் தேவை நீங்கும் வரை அனுமதி பொறுப்பில் இருப்பார். மேலும் இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக, தமிழக அரசு சார்பாக டெல்லியில் சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது வழக்கம். இது, அமைச்சர் பதவிக்கு இணையானது. கேபினட் அந்தஸ்து கொண்ட பதவி.
அரசு கார், கிரீன்வேஸ் சாலை பங்களா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளிக்கப்படும். சென்னை தலைமை செயலகத்திலும் டெல்லி பிரதிநிதிக்கு தனி அறை ஒதுக்கப்படும். அந்த வகையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணாவை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு நேற்று நியமித்துள்ளது.
மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து முறைப்படி பெற்றுத் தருவது, கோரிக்கைகளை வலியுறுத்துவது, இந்த சிறப்பு பிரதிநிதியின் முக்கிய பொறுப்பாகும். முக்கியமாக, தமிழகத்தை பாதிக்கும் திட்டங்கள் இருந்தால் மாநில அரசுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். இதனால், இந்த பதவிக்கு அரசியல் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்களே இதுவரை திமுக, அதிமுக அரசால் நியமிக்கப்பட்டு வந்தனர்.
இதுவரை திமுகவை சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், கம்பம் செல்வேந்திரன் மற்றும் அதிமுகவை சேர்ந்த தளவாய் சுந்தரம், எஸ்.டி.கே.ஜக்கையன், திருவாரூர் அசோகன், நரசிம்மன் ஆகியோரே டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதவியில் இருந்துள்ளனர்.
ஆனால், முதன்முறையாக இந்த நடைமுறையை உடைத்து, முதல்வர் விஜய் படத்தின் தயாரிப்பாளரும், அவரது நண்பரும், அவருக்கு எல்லா வகையிலும் உதவக்கூடிய ஒருவரை, அதுவும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்து இருப்பது தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக இரு மாநிலத்துக்கும் இடையே காவிரி பிரச்சினை உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை நியமித்திருப்பது, அந்த வழக்கின் போக்கிலும் மாற்றம் ஏற்படலாம் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
விஜய் அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


