சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடலோர ஆந்திராவில் இருந்து மத்திய மகாராஷ்டிரா வரை தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.
இந்நிலையில், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வரும் 30ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


