தமிழகத்தின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருப்பதற்கு, ஜோசப் விஜய் அரசை எதிர்த்து கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் அதிமுக ஐடி விங், தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பதிவில், கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாரயணாவுக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி கொடுத்துள்ளனர். இந்தப் பிரதிநிதியின் பணி என்னவென்றால் தமிழ்நாட்டுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பது. குறிப்பாக நமக்கு அன்றாட பிரச்னையான விவசாயிகளின் வாழ்வாதரமான காவிரி நதிநீர் பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை போன்று நிறைய பிரச்னைகள் உள்ளன. மேகதாது பிரச்னை இன்று மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
கர்நாடக அரசு அணை கட்டுவோம் என பிடிவாதமாக உள்ளது. நான் உட்பட அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த நேரத்தில் கர்நாடகாவை சேர்ந்தவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பதன் மூலம் என்ன கிடைக்கப்போகிறது. தமிழ்நாட்டின் பிரச்னைகளை கர்நாடகாவை சேர்ந்தவர் எப்படி பேச முடியும். காவிரி பிரச்னையில் எப்படி நடுநிலைமையாக செயல்படமுடியும் என்ற கேள்வி உள்ளது. ஏற்கனவே ரத்தன் என்பவருக்கு ஒரு பதவி கொடுத்தார்கள், பிறகு அதை திரும்ப பெற்றார்கள்.
ஜெகதீஸ் என்பவருக்கு பதவி கொடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு அரசாணையை வெளியிடுகிறார்கள். குழப்பங்கள் இல்லாமல் நேர்மையாக செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நான் விரும்புவது. உண்மையாகவே அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றால் மறுபரிசீலணை செய்யவேண்டும். கர்நாடகாவை சேர்ந்தவர் மேகதாது பிரச்னையில் எப்படி தமிழ்நாட்டுக்கு சாதமாக பேசமுடியும் என்பதுதான் மக்களிடமும் என்னிடமும் உள்ள கேள்வி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட பதிவில், கர்நாடக காங்கிரஸ் அரசின் ப்ராக்சி கவர்மென்டாக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசு? தமிழ்நாட்டை சாராத, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற சான்று இருந்தால் போதுமா முதல்வர் விஜய்.
அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்னை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்? புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் விஜய் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக விஜய் அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்பு பாலமாக செயல்பட வேண்டிய முக்கிய பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்? தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாசாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்?
சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தை சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரை நியமிக்க காரணம் என்ன? முதல்வர் விஜய் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரசின் நிர்பந்தமா? கூட்டணிக் கட்சியான காங்கிரசிடம் பேசி மேகதாது அணை பிரச்னையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?. மாற்று சக்தி என்று கூறி, காங்கிரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும். ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதல்வர் ஜோசப் விஜய், தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக வெங்கட் கே நாராயணாக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.
எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத் தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற முதல்வர் ஜோசப் விஜயை வலியுறுத்தியுள்ளார்.


