அதிமுகவில் ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவை இபிஎஸ் இடமிருந்து மீட்கும் நோக்கத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஓபிஎஸ் தொடங்கினார். அதே நேரம், எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல், இபிஎஸ்ஸுக்கு பிடிக்காத டிடிவி தினகரனுடன் நட்பு பாராட்டி வந்தார்.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின், சத்தத்தை குறைத்து கொண்டு, இபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகக் கூறி வருகிறார்.
அதே வேளை, பாஜவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்ததுடன், மதுராந்தகம் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில், அண்ணன் எடப்பாடி கே பழனிசாமியின் தலைமையை ஏற்பதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஓபிஎஸ், சசிகலாவும் என்டிஏ கூட்டணிக்கு வருவார்கள், மீண்டும் அதிமுக உடன் இணைவார்கள் என்றும் இதற்கான மறைமுக உள்ளடி வேலைகளை பாஜ தொடங்கி விட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இருந்து நீக்குவது என்பது பொதுக்குழு கூடி முடிவெடுத்தது. ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். பொதுக்குழுவில் எடுத்த முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது. கூட்டணி விவகாரத்தை பொருத்தவரை, அதிமுக மிக தெளிவாக செயல்பட்டு வருகிறது. இன்னும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது இறுதியான பின் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு தொடங்கும் என்று கூறினார்.


