சென்னையில் கொடிக்கம்பங்கள் நட இணையதளத்தில் பதிவது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஏற்கனவே அரசியல், மதம் அல்லது சங்கங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கொடிக்கம்பங்கள் நட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கொடிக்கம்பங்கள் நடுவதற்கு சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பான வழிமுறைகளில் மதச்சார்பான நிகழ்வுகளுக்கு 7 நாட்களும் மதசார்பற்ற நிகழ்ச்சிகளுக்கு 3 நாட்களும் அனுமதி வழங்கப்படும் எனவும் கொடிக்கம்பங்கள் நடுவதற்கு மாநகராட்சி ஆணையர் அனுமதியளித்த பின் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் அரசியல், மதம் அல்லது சங்கம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காகத் தற்காலிகக் கொடிக்கம்பங்களை நடுவதற்கு சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறாமல் கொடிக்கம்பங்களை நிறுவினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பித்த பிறகு கூடுதல் விவரங்களையும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


