சுகாதரம் அடிப்படை உரிமை என்பதன் கீழ், நாடு முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளில் தேவைப்படுவோருக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாதவிடாய் குறித்த அச்ச உணர்வினாலும், தயக்கத்தினாலும், ஏழ்மை காரணமாக சானிட்டரி நாப்கின்கள் வாங்க முடியாததாலும் மாணவிகள் பள்ளிக்கு வருவதையும் படிப்பை பாதியில் கைவிடும் சூழலும் உள்ளது. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கிட அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை அகில இந்திய அளவில் ஏன் செயல்படுத்தக் கூடாது? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் மற்றும் ஜார்க்கண்ட்டை சேர்ந்த பங்கஜ் குமார் மண்டல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்த பிறகு, கடந்தாண்டு டிச.10ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும், ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் அல்லது புதிதாக கட்டப்படும் கழிப்பறைகள் மாற்றுத் திறனாளி மாணவிகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் தண்ணீர் வசதியுடன் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.
தண்ணீர் இணைப்புடன் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதி வழங்கப்படுவதை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளி கழிப்பறைகளிலும் சோப்பு மற்றும் தண்ணீர் எல்லா நேரங்களிலும் கிடைக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியும் மக்கும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதிபடுத்த வேண்டும். இத்தகைய சானிட்டரி நாப்கின்கள், மாணவிகளுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். நாப்கின் வழங்க இயந்திரங்களை நிறுவலாம்.
மாணவிகள் தங்களது உள்ளாடைகள், சீருடை, நாப்கின்களை மாற்றிக் கொள்ள வழிவகை செய்யும் விதத்தில், பள்ளி வளாகங்களில் மாதவிடாய் நல மேலாண்மை பகுதிகளை அமைக்க வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாள பள்ளி வளாகங்களில் உள்ள ஒவ்வொரு கழிப்பறையிலும் மூடிய நிலையில் குப்பைத் தொட்டிகள் உரிய முறையில் பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாதவிடாய் என்பது வெட்கப்படுவதற்கான காரணமாக இருக்கக் கூடாது. அதுபற்றிய அறிவியல் பார்வையை மாணவர்கள் பெற வேண்டும்.
குறிப்பாக இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவு வாழ்வதற்கான அடிப்பை உரிமையை வழங்கி உள்ளது. எனவே மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமையையும், மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைப் பெறுவதற்கான உரிமை இதன் கீழ் ஒரு அடிப்படை உரிமை என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை பின்பற்றவில்லை என்றால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பித்தனர்.


