வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியான சூழலில், முடிவை தீர்மானிக்கும் கிங் மேக்கராக இருக்கப் போவதில்லை என தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிய பிறகு முதல் முறையாக ஆங்கில ஊடகமொன்றுக்கு சென்னையில் நேற்று பேட்டியளித்தார்.
பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், அவரை சந்தித்த ஊடகக் குழுவினர் அவருடனான 45 நிமிடத்துக்கும் மேலான நேர்காணலின் போது தவெக தலைவர் விஜய் பகிர்ந்து கொண்ட விவரங்களின் அடிப்படையில் அது குறித்து விவாதித்த அரசியல் கள ஆய்வு வெளியாகி உள்ளது.
அதில், கரூர் துயர சம்பவம் தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் அந்நிகழ்வு இன்றளவும் தன்னை பாதிப்பதாகவும், இப்படியொரு நிகழ்வை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
என்ன செய்ய வேண்டும் என நினைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் இலக்குகள் பற்றி அறியாமல் எதையும் செய்வதில்லை என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார். அந்தவகையில், அரசியல் தான் எதிர்காலம் என்று முடிவு செய்திருப்பதாக தெளிவுடன் எடுத்துரைத்துள்ளார்.
ஜன நாயகன் வெளியீட்டில் சிக்கல் வரும் என முன்கூட்டியே கணித்திருந்ததாகவும் அரசியல் காரணங்களுக்காக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கு மனதளவில் தயாராகியிருந்ததாகவும் படம் தள்ளிப்போவதால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக வருந்துவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் முடிவை தீர்மானிக்கும் கிங் மேக்கரா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய், வெற்றி பெறுவேன் என்ற சூழல் இருக்கும்போது ஏன் கிங் மேக்கராக இருக்கப் போகிறேன். எனக்குச் சேரும் கூட்டத்தை கவனித்திருக்கிறீர்கள் தானே. அரசியலில் கிங் மேக்கராகவது இரண்டாமிடம். அப்படி முத்திரை குத்தப்பட விரும்பவில்லை. தனக்கு வேண்டியது முதலிடம் மட்டுமே என்று கூறியுள்ளார்.
தனது 33 வருட சினிமா அனுபவத்துக்கு பிறகே இனி அரசியல் தான் என்று தீர்மானித்து களத்திற்கு வந்துள்ளேன். இந்த மாற்றம் அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை. அந்தளவு கஷ்டப்பட்டு தான் இந்த இடத்தை அடைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, விஜய் ஷாட்டாக பதில் கூறுவார் என்ற கூற்றை தவிடு பொடியாக்கி நீண்ட பதில்கள் அளித்ததாகவும் அவர் ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான, உறுதியான தலைவர் என்று தெரிந்ததாகவும் ஊடகக் குழு விமர்சித்துள்ளது.


