மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இது வரும் 13ம் தேதி முடிவடைகிறது. இதனையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 29ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இது அவரது 9வது பட்ஜெட் ஆகும். இதன் மூலம், தொடர்ந்து 9 முறை அதுவும் ஒரே பிரதமரின் தலைமையின் கீழ் பட்ஜெட்டை வாசித்த ஒரே நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. நிலைக்கழிவும் ரூ.50,000ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதன்படி, ஓராண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை.
இன்றைய பட்ஜெட்டில் நிலைக்கழிவு ரூ.75,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படவும் , ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு வரம்பும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
நடப்பாண்டின் தொடக்கம் முதலே தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றின் மீதான சுங்க வரி குறைக்கப்படவும் சிகரெட், புகையிலை பொருட்கள் மீதான வரி உயர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளது.


