பிரபல நடிகர் விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்.2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பிப்.2ம் தேதி பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் விஜய் கட்சிக் கொடியை ஏற்றுவது வழக்கமாகும்.
இந்நிலையில், இன்று பிப்.2ம் தேதி தவெகவின் 3ம் ஆண்டு தொடக்கவிழா பனையூரில் களை கட்டியுள்ளது. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் தோரணங்கள் கட்டப்பட்டு, மேள தாளத்துடன் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.
அப்பகுதியில் தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் தலைமை அலுவலகத்திற்குள் செல்ல முன்கூட்டியே பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் அங்கு வரவிருப்பதையொட்டி தொண்டர்கள் ஆரவாரத்துடன் முழக்கமிட்டப்படி காத்திருக்கின்றனர். அதே போன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கட்சிக் கொடியேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை அலுவலகத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தவெக கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. இதையடுத்து, விஜய் தவெக கொடியை ஏற்றி வைத்தார்.


