சென்னை அருகே பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் 3ம் ஆண்டு தொடக்கவிழாவில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது, திமுகவை விமர்சித்து கற்பனை திருக்குறள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், விஜய் பல கனவுகளிலும், கற்பனைகளிலும் இருக்கிறார். மக்களுக்கான எந்த திட்டத்தைப் பற்றியோ, கொள்கைகளை பற்றியோ அவர் எதுவும் சொல்லவில்லை. மக்கள் நலம் சார்ந்த விஷயங்களுக்கு இதுவரை அவர் பேசவில்லை.
மக்களுக்காக எந்தப் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ அவரிடம் இருந்து இல்லை. முதலமைச்சராக வேண்டும் என்பதே அவரின் ஒற்றைச் சிந்தனை.
விஜய்க்காக உயிரிழந்தவர்களுக்கு, நேரில் சென்று ஆறுதல் கூறாமல், சென்னைக்கு அழைத்து ஆறுதல் சொல்கிறார். அந்த அளவுக்குதான் அவர் தொண்டர்களை மதிக்கிறார்.
திமுகவை எதிர்க்கக்கூடிய ஒரே கட்சி தவெக தான் என்று விஜய் சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிதான் பதில் சொல்ல வேண்டும். விஜய் எங்களுக்கு எதிரியே இல்லை.
விஜய் செயல்படவே இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்களில் கூட்டம் சேர்த்து பேசி இருக்கிறார். அத்துடன் சரி. மற்றபடி அவர் வீட்டில் இருந்தே செயல்படுகிறார்; மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. மக்கள் பிரச்சினை பற்றி அவர் பேசுவதில்லை. யாரோ எழுதிக் கொடுக்கும் வசனங்களை பேசிவிட்டு வழக்கம் போல ஒரு நடிகர் என்ன செய்வாரோ அதை அவர் செய்கிறார் எனக் கூறியுள்ளார்.


