தமிழ் கடவுளாம் முருகனுக்கு உகந்த தைப்பூச நாளில் அறுபடை வீடுகளிலும் அதிகாலை முதலே பக்தர் சாமி தரிசனம் செய்தனர்.
தை மாத பெளர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனை நினைத்து விரதம் மேற்கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நாளை முருகப்பெருமான் ஞானவேல் பெற்று சூரபத்மனை வென்ற தீமை ஒழிந்த நாளாக கருதி, பக்தர்கள் விரதமிருந்தும், காவடி எடுத்தும், பால் குடம் சுமந்தும் மற்றும் அலகு குத்தி சென்றும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தைப்பூசத்தையொட்டி, அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, மற்றும் பழமுதிர்சோலை முருகப்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பௌர்ணமி மற்றும் விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர். முருகனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு அந்தந்த கோயில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.


