சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்தைப் பொறுத்தே, சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பை மத்தியில் ஆளும் பாஜ அரசு கடந்த பல ஆண்டுளாக எண்ணெய் சந்தை நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது.
இதனால், எண்ணெய் நிறுவனங்களும் அரசுக்கு ஆதரவாக மாநில மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரங்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தாமல் பராமரிப்பது வழக்கமாகும்.
இந்நிலையில், ஓட்டல்கள், டீக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,899க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2வது மாதமாக விலை உயர்த்தப்பட்டுள்ளளது.
மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எரிவாயு செலவும் அதிகரிப்பது சிறு மற்றும் நடுத்தர உணவகங்களை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதே வேளை, வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


