மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த பட்ஜெட்டில் நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையிலான புதிய ரயில்சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், இதில் அறிவிக்கப்பட்டுள்ள 7 அதிவேக ரயில் வழித்தடங்களில், தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
தமிழ் நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் உள்பட நாடு முழுவது உள்ள 15 தொல்லியல் பகுதிகளில் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். இதன்படி, ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்துடன் சேர்த்து, கலாச்சார மையமும் அமையவுள்ளது.
பூமியிலிருந்து அரிய வகை கனிமங்களை தோண்டி எடுப்பதற்கான தனிப்பட்ட அரிய கனிம வழித்தடம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். இதன் மூலம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் அரிய வகை கனிமங்களுக்கான தொழில் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.
மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் நிர்மலா அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 60%க்கும் மேல் தன்னகத்தே கொண்டுள்ள திருப்பூர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் இறக்குமதி வரி விதிப்பால் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த திட்டம் மானது முக்கியமானதொரு மீட்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.


