தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இங்குள்ள 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
இதற்கென அமைக்கப்பட்ட குழுவில் தமிழக பாஜக முன்னாள் தலைவர்களான அண்ணாமலை, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 4 தலா 6 தொகுதிகள் வரை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளதாகவும் தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். மேலும், தந்தையை கவனிக்க வேண்டியது தனது முதல்கடமை என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஏற்கெனவே பேசிவிட்டதாகவும் அவர் கூறினார்.
பாஜக மேலிடம் கேட்டுக்கொண்டால் சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அதே நேரத்தில் தந்தையை விட்டு விட்டு தேர்தல் பணிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இயலாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.


