ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைக் காரணம் காண்பித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இத்தகவலை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.
இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பதாகவும் பிரதமர் மோடி உடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது சமூக வலைதளப் பக்கத்தில், இந்திய பிரதமர் மோடியுடன் உரையாடியது பெருமையாக இருந்தது. அவர் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர், மேலும் தனது நாட்டின் சக்திவாய்ந்த மற்றும் மதிக்கப்படும் தலைவராக உள்ளார். வர்த்தகம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினோம். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்வதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவரது கோரிக்கையின்படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும்.
அதேபோல், இந்தியாவும் அமெரிக்காவிற்கு எதிரான வரிகளை குறைக்கும், நீக்கும் நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு இனி வரும் காலங்களில் இன்னும் வலுப்பெறும் என்று பதிவிட்டுள்ளார்.


