தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மே.வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜயின் தவெக, சீமானின் நாதக என தற்போது வரை 4 முனைப்போட்டி நிலவும் சூழல் உள்ளது. இது தேர்தல் தேதி அறிவித்த பிறகு மும்முனை போட்டியாகவும் மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 23ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதிமுக தலைமையில் தேர்தலை சந்திப்பதாக அனைத்து கட்சிகளும் முன்மொழிந்தன.
அதே வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரம், கூடுதல் தொகுதிகள் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது.
இதனிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடருக்காக டெல்லி சென்ற திமுக எம்பியும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
அப்போது, காங்கிரஸ் தரப்பில் 41 சீட்டுகளும் 2 ராஜ்யசபா சீட்டுகளும் உள்ளாட்சி தேர்தலில் 20% வரை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் அப்செட் ஆகி இருப்பதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
இதன் போது, காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும். இம்மாத இறுதிக்குள் தொகுதிப் பங்கீட்டை இறுதிப்படுத்தி பரப்புரையை தொடங்க திமுக கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக உள்ளன. நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை, விமர்சிப்பவர்களையும் நண்பர்களாகவே பார்க்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


