தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தவெக அதிக வாக்குகள் பெற்று அதிமுகவை பின்னுக்கு தள்ளும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வியூக அமைப்பாளரும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவருமான பிரவீன் சக்ரவர்த்தி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை விட தவெக அதிக வாக்குகள் பெறும். கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டாலும் தவெக வலுவாகவே உள்ளதாகவும் இன்றைய சூழலில் தனித்து விஜய்க்கு 18% வாக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.
தவெகவை மக்கள் அங்கீகரித்துள்ளது தான் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளதாகவும் விஜய்க்கு வீட்டுக்கு ஒரு வோட்டு உள்ளது என்ற பேச்சு இருக்கிறது. அக்கட்சியின் வளர்ச்சி ஊரறிந்தது, பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
தவெகவுக்கு வாக்கு என்பதில் இன்றைய தலைமுறை இளைஞர்களும் பெண்களும் தெளிவாக இருப்பதாகவும் தமிழகத்தின் 3வது பெரும் அரசியல் சக்தியாக தவெக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள சூழலில் காங்கிரஸின் முக்கிய பிரமுகராக கருதப்படும் பிரவீன் சக்ரவர்த்தி இவ்வாறு பேட்டி அளித்திருப்பது நிச்சயமாக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


