ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தேசிய கட்சியான காங்கிரஸ் கடந்த 2021ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆனால், சமீப காலமாக காங். மூத்த தலைவர்களான பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ராஜேஷ்குமார் போன்றோர் இந்த கோரிக்கைகளை மேலிடத் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள தமிழ்நாட்டில் ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசியதும் கூட்டணி இறுதியானதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால், இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் 30 தொகுதி, 2 ராஜ்யசபா சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 20% கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு திமுக தரப்பில் மேலும் ஒன்றிரண்டு தொகுதிகள் வரை ஒதுக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இதையடுத்தே, முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு விரைவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் வியூக வகுப்பாளரான பிரவீன் சக்ரவர்த்தி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், தவெகவுக்கு தனித்து போட்டியிட்டாலும் 18% வாக்குகள் இருப்பதாகவும் அதன் வளர்ச்சி பாராட்டுதலுக்குரியது, தமிழகத்தின் 3வது அரசியல் சக்தியாக தவெக உருவெடுத்துள்ளது என்றும் புகழ்ந்து பேசியுள்ளார்.
முன்னதாக, ராகுலும் முதல்வர் ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, இது போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் உறுதியளித்ததாக தகவல் வெளியானது.
தற்போது அதனையும் மீறி பிரவீன் சக்ரவர்த்தி பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளாரா என்றே எண்ணத் தோன்றுகிறது.
நேற்றைய தினம் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு கூட்டத்தில் பேசிய பிறகு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூட்டணி முடிவுகள் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கூட்டணி ஆட்சி என்பதில் காங்கிரஸ் விடாப்பிடியாக இருப்பதாகவும் 35 தொகுதிகளை கேட்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு திமுக தரப்பில் மேலும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சம்மதம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால் இறங்கி வரக் கூடும் என்பதாலும் கேட்கும் எண்ணிக்கை கிடைக்காவிட்டால் விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எண்ணத்திலும் காங்கிரஸ் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வைக்கும் ‘செக்மேட்’ ஆகவே பார்க்கப்படுகிறது.


