தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அவருக்கு ஒதுக்கிய தேர்தல் பொறுப்பாளர் பணிகளில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
இதற்கு, தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தொடக்கம் முதல் இருந்து வந்த மோதலே காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், சிங்காநல்லூர், மதுரை தெற்கு, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம், காரைக்குடி ஆகிய 6 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி, தன்னை குறுகிய வட்டத்திற்குள் அடக்கியதால் தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அண்ணாமலை விலகியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தவிர, அதிமுகவுடனான கூட்டணி உள்பட பாஜக தேசிய மற்றும் மாநிலத் தலைமையின் பல்வேறு முடிவுகளால் அவர் தொடர்ந்து அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் கட்டமைத்த ஓபிஎஸ் உள்ளிட்ட என்டிஏ கூட்டணியை நயினார் நாகேந்திரன் கண்டுகொள்ளாமல் இபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாலும் அதிருப்தியில் இருந்த அவர், தந்தையின் உடல்நிலையைக் காரணம் காண்பித்து விலகியதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம், எம்பி அல்லது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை எதிர்பார்த்திருக்கும் அண்ணாமலை தனது அதிருப்தியை டெல்லி மேலிடத் தலைவர்களான பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வெளிப்படையாக காண்பித்துள்ளதாகவும் இதுகுறித்து விரைவில் டெல்லி மேலிடத் தலைமை முடிவு எடுக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


