தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி, தமிழக அரசியல் களத்தில் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, இந்த முறை 4 முனை போட்டி இருக்கும் என்று தெரிகிறது.
இதில், ஆளும் திமுக தலைமையில் காங்., விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க உள்ளன. அதே போன்று, என்டிஏ கூட்டணி அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதன் மாவட்ட செயலர்கள் கூட்டம் தொடங்கியது.
இதில், தேர்தல் நெருங்குவதையொட்டி, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பணிகள், பிரசாரம் குறித்த வியூகங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


