சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை அடையார், திருவான்மியூர், பள்ளிக்கரணை, இசிஆர் சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன.
இறந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய் தடுப்பு புலனாய்வுக் குழுவினர் சேகரித்து, போபாலில் உள்ள மத்திய தேசிய விலங்குகள் நோய் கட்டுபாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மேற்கொண்ட சோதனைகளின் முடிவில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு, மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் அனுப்பி உள்ளது.
அதில், திடீரென இறக்கும் பறவைகள் குறித்து கால்நடை பராமரிப்பு துறைக்கு மக்கள் தகவல் அளிக்கவும், வெறும் கைகளால் காகம் உள்ளிட்ட இறந்த பறவைகள் மற்றும் விலங்குகளை தொட வேண்டாம் என்றும் பறவைக் காய்ச்சலால் இறந்த பறவைகளை 8 அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளா, பீகார் மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


