தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களின் அரசியல் களத்தில் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழத்தை பொருத்தவரை நடிகர் விஜயின் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு பிப்.6ம் தேதி முதல் பிப்.14ம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு நாளை (பிப்.6) முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 12ம் தேதி வரை, தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை பிப். 12ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தொகுதிகளுக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரம், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரம், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


