வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி கலைக்கப்பட்டு, முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.
புதிய அரசு பதவியேற்ற மறுநாளே அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினரும், துணை ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு கடந்த 2023ம் ஆண்டு பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள் பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டத்தில் களமிறங்கினர். இதனை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அப்போது, இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
வன்முறை நீடித்ததைத் தொடர்ந்து, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பிரேன் சிங் பதவி விலகினார். அதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
ஜனாதிபதி ஆட்சி ஓராண்டை நிறைவு செய்ய இருந்த நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூடி புதிய முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங்கை தேர்வு செய்து அவர் பதவியேற்றார். இரண்டு துணை முதல்வர்களில் ஒருவராக குக்கி சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் நெம்ச்சா கிப்ஜென் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் புதிய அரசில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி அமைப்பு போராட்டத்தில் களமிறங்கியுள்ளது. குக்கி சமூகப் போராட்டத்தில் துணை முதல்வர் நெம்ச்சா கிப்ஜென்னை துரோகி என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரை கொலை செய்பவர்களுக்கு ரூ.20 லட்சம், புதிய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஹமார்-ஜோமி இனத்தைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களை கொலை செய்பவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று குக்கி அமைப்பு அறிவித்துள்ளது.
துய்போங் பகுதியில் நடந்த போராட்டத்தில் பொதுசொத்துகளை அடித்து நொறுக்கி, டயர்களுக்கு தீ வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பாதுகாப்பு படையினர் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. குக்கி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் வன்முறைக் களமாகி உள்ளது.
மணிப்பூரில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைந்த மறுநாளே மீண்டும் வன்முறை வெடித்திருப்பது மத்தியில் ஆளும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.


