வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015-16ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான அவரது வருமானம் ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் கைப்பற்றிய ஆவணங்களுடன் ஒப்பிடும் போது, ’புலி’ படத்தின் சம்பளமாக வாங்கிய ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை கண்டறிந்தது. மேலும், வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்தது.
இந்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென்றும் விஜய் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால், வருமான வரிச்சட்டப்படி விஜய்க்கு அபராதம் விதித்தது சரியே என்ற வாதம் வருமான வரித்துறை தரப்பில் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்று உத்தரவிட்டார்.


