19 வயதுக்கு உட்பட்டோருக்கான 16ஆவது இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது.
இதன் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேயில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்தது.
இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்தின் பந்து வீச்சில் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். 80 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி 15 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அம்பரீஷ் 3 விக்கெட்டுகள், தீபேஷ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதற்கு முன்பு 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்த இந்திய அணி தற்போது 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


